Chillzee Princess Series - 02 - Princess Pirai Nila.
கதை சுருக்கம்:
வேலையே உலகம் என்று இருக்கும் அகிலா லே-ஆஃப் ஆன மன வருத்தத்தில் இருந்து தப்பிக்க ஹெவன் ஐலான்டிற்கு வருகிறாள். அங்கே அவள் தங்கும் ஹோட்டலில் ஆனந்த் அவளுக்கு அறிமுகம் ஆகிறான். அகிலாவின் மனம் ஆனந்தின் வசம் செல்கிறது! ஆனந்த் அந்த ஹோட்டலில் பணி புரிபவன் என்று அகிலா நினைக்க, அவனோ விஜயத் தீவின் இளவரசன் என்பது தெரிய வருகிறது. அகிலாவை புரிந்துக் கொள்ளும் ஆனந்த், தங்கள் தீவை சுற்றி இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதுகாக்க அகிலாவின் உதவியை நாடுகிறான்.
அகிலாவும் ஆனந்திற்காக உதவ சம்மதிக்கிறாள். விஜயத் தீவில் ஆனந்தின் அக்கா பிறைநிலா, அவளுக்காக நிச்சயம் செய்யப் பட்டிருக்கும் இளவரசன் விஜயன் ஆகியோரையும் அகிலா சந்திக்கிறாள். பிறைநிலா - அகிலா நடுவே முதல் சந்திப்பு முதலே 'கேட் - மவுஸ்' பனிப்போர் நடக்கிறது! ஆனால் விஜயத் தீவு மக்கள் அனைவரும் பிறைநிலாவின் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். அதுவும் ஆனந்தை விட அவள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். அது எதனால் என்று அகிலாவிற்கு புரிய மறுக்கிறது! தனக்கே உரிய ஆர்வக் கோளாரினால் அதையும் தெரிந்துக் கொள்ள முயலுகிறாள்!
எதனால் பெரியவர்கள் நிச்சயம் செய்த பிறைநிலா - விஜயன் திருமணம் தடைப் பட்டு நிற்கிறது? ஆனந்த் - அகிலா காதலை பிறைநிலா ஏற்றுக் கொள்வாளா? விஜயத் தீவின் பிரச்சனைகள் எப்படி தீர்ந்தது? அகிலா - பிறைநிலா தங்கள் பனிப்போரை எப்படி முடிவுக்கு கொண்டு வந்தார்கள்???
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
பொன் மாலை மயக்கம்...!
அத்தியாயம் 01
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அகிலா ரொம்பவும் சிரமப்பட்டு கண்களை திறந்துப் பார்த்தாள். பாடல் அவளுடைய மொபைலில் இருந்து தான் ஒலித்துக் கொண்டிருந்தது. தப்பு, தப்பு, அழைப்பு வந்திருப்பதை சொல்லிக் கொண்டிருந்தது.
போனை கையில் எடுக்காமலே அழைப்பது யார் என்று அகிலாவிற்கு தெரியும். அவளுடைய பெரியம்மா மகள் கயல்!
போனை எடுக்காவிட்டால் கயல் விடமாட்டாள் என்பது தெரியும். எனவே கண்களை மூடிக் கொண்டே கையை நீட்டி போனை கையில் எடுத்தாள்.
"கயல், எதுக்கு இப்படி விடியறதுக்கு முன்னால போன் செய்து தொல்லை செய்ற?"
"விடியுறதுக்கு முன்னாடியா? மணி என்ன தெரியுமா? ஒன்பதரை!"
"இருக்கட்டும்! ஒரு வருஷமா தூங்காம வேலை செய்துட்டு இப்போ ஒரு மாசமா தான் ரிலாக்ஸ் செய்துட்டு இருக்கேன். எதுக்கு டிஸ்டர்ப் செய்ற?"
அகிலா புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்துக் கொண்டிருப்பவள். மூன்று மாதத்தில் முடிக்க சிரமமாக இருக்கும் ப்ராஜக்ட் ஒன்றை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டான கன்டிஷனுடன் மூன்று மாதங்களுக்கு முன் அவள் தலையில் கட்டி இருந்தார்கள். அகிலா தன்னுடைய டீமில் இருந்தவர்களை கொடுமைப் படுத்தாத குறையாக அவளுடன் இணைந்து வேலை செய்ய வைத்து நல்ல விதமாக ப்ராஜக்ட்டை முடித்துக் கொடுத்திருந்தாள். இப்போது அந்த ப்ராஜக்ட் ப்ரோடக்ஷனிலும் லைவ் ஆகி எந்த பிரச்சனையும் இல்லாமல் போய் கொண்டிருந்தது. ஆனால் எதனாலோ அகிலாவிற்கு இன்னும் அடுத்த ப்ராஜக்ட் அசைன் செய்யப் படவில்லை. அவளின் டீமில் இருந்தவர்கள் தற்காலிகமாக வேறு டீம் ப்ராஜக்ட்டில் வேலை செய்ய ஆரம்பித்திருந்தார்கள்... அகிலாவும் இதைப் பற்றி அவளுடைய மேனேஜரிடம் பேசிக் கொண்டு தான் இருந்தாள். அவரோ அவளை பொறுமையாக இருக்க சொல்லிக் கொண்டிருந்தார்.
உலக அதிசயமாக கிடைத்த இந்த ஒய்வு நேரத்தை சோம்பலுடன் கழித்துக் கொண்டிருந்தாள் அகிலா. பொதுவாக ஏழு மணிக்கு ஆபீஸ் கிளம்பி ஒன்பது மணிக்கு மேல் ஹாஸ்டல் வருபவள், இப்போதெல்லாம் பத்தரை மணிக்கு மேல் ஆபீஸ் சென்று விட்டு இரவு எட்டு மணி போல திரும்பிக் கொண்டிருந்தாள்.
"நான் பேசுறது உனக்கு டிஸ்டர்பன்ஸா இருந்தா விட்ரு" என்று கோபமாக சொல்வதாக காட்டிக் கொண்டாலும், கயலின் பேச்சில் சிறிதும் கோபமில்லை. அது அகிலாவிற்கும் தெரியும். அவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரிகள் இல்லையென்றாலும் அதே அளவு அன்பு இருவரிடமும் இருந்தது. இருவரின் பெற்றோரும் கிராமத்தில் இருந்தார்கள். கயலுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது. அவளும் சென்னையிலேயே இருப்பதால் சகோதரிகள் தினமும் போனில் பேசிக் கொண்டார்கள்... அவ்வப் போது நேரிலும் சந்தித்துக் கொண்டார்கள்.
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Bindu Vinod
- Bindu
- Vinod
- Romance
- Family
- from_Chillzee
- Tamil
- Drama
- Books
- Novel
- ChillzeePrincess