Chillzee KiMo Books - பூ ஒன்றுக் கண்டேன்! - பிந்து வினோத் : Poo ondru kanden - Bindu Vinod

பூ ஒன்றுக்  கண்டேன்! - பிந்து வினோத் : Poo ondru kanden - Bindu Vinod
 

பூ ஒன்றுக் கண்டேன்! - பிந்து வினோத்

Another edition available.

அமெரிக்காவில் இருந்து விடுப்பில் இந்தியா வரும் சதீஷ் குமார் (எ) எஸ்.கே நந்தினி எனும் ஆசிரியையை சந்திக்கிறான். அவர்களின் முதல் சந்திப்பு நினைவு வைத்துக் கொள்ள முடியாத விதத்தில் டிஷூம் - டிஷூம் உடன் தொடங்குகிறது.

இது தெரியாமல் பெரியவர்கள் எஸ்.கே - நந்தினிக்கு திருமணப் பேச்சு தொடங்க, நந்தினி எஸ்.கே இருவருமே திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார்கள்.

அதில் வெற்றிப் பெற்றார்களா? அல்லது மோதல் காதலில் வந்து முடிந்ததா??

 

அத்தியாயம் 01,

  

சென்னை சர்வதேச விமான நிலையம்,

  

விமான நிலையத்தில் இருந்த சுங்கத்துரையின் சோதனையை தாண்டி வந்த சதீஷ்குமார், ஒரு முறை மூச்சை இழுத்து வெளியேற்றினான். நான்கு ஆண்டுகளுக்கு பின் சுவாசித்த சென்னையின் கொஞ்சம் பொல்யுட் ஆன அந்த காற்று மனதிற்கு இதமாக இருந்தது.

  

வெளியில் வந்து, கூட்டத்தில் பெற்றோரை தேடினான். வெகு நேரம் தேட வேண்டிய அவசியம் இல்லாமல், “சதீஷ்...” “அண்ணா...” “கண்ணா...” என பரிச்சயமான குரல்கள் அவனை அழைத்தன.

  

“அம்மா...” வொர்ல்ட் கப் வென்ற கேப்டனை போல ஓடிப் போய் அம்மா ஈஸ்வரியை கட்டிப் பிடித்துக் கொண்டான்.

  

“எப்படிடா இருக்க எஸ்.கே?”,

  

“பார்த்தா தெரியலைம்மா? சூப்பர் ஸ்மார்ட்டா இருக்கேன்ல???”,

  

“ஸ்மார்ட்டா? லைட்டா தொப்பை தெரியுது!” என்று கிடைத்த வாய்ப்பில் அண்ணனை கலாட்டா செய்தாள் சுப்ரியா.

  

“அம்மா சாப்பாடு சாப்டாம ரெடி டூ ஈட் சாப்பாடா சாப்பிட்டா அப்படி தான் இருக்கும்டி!”,

  

“அதெல்லாம் இல்லை பீர் அடிச்சா தான் தொப்பை வருமாம்!”,

  

“அடிப்பாவி உனக்கு எப்படி இதெல்லாம் தெரியுது??? எனக்கு அதை பத்தி எல்லாம் தெரியவே தெரியாது!”,

  

“நீ எல்லாம் அமெரிக்கா போனதே வேஸ்ட்டா எஸ்.கே!” என்று மகளுடன் கூட்டணி அமைத்து மகனை கலாய்த்தார் சரவணன்.

  

“அப்பாவும் பொண்ணும் சும்மா இருங்க! பாவம் என் குழந்தை இரண்டு வருஷம் கழிச்சு வந்திருக்கான். சும்மா அவனைப் போய் கலாட்டா செய்துட்டு இருக்கீங்க” என்று சதீஷுக்கு சப்போர்ட் செய்தாள் ஈஸ்வரி.

  

“இந்த காலத்து பிள்ளைங்க பத்தி தெரியாம உன் பிள்ளையை தலைக்கு மேல தூக்கி வைக்குற ஈஸ்வரி! பாவம் நீ!”,

  

“வாவ் அம்மா நீங்க செம ஸ்ட்ராங்கான வுமன் ம்மா!!!!” என்றாள் சுப்ரியா சீரியஸாக!

  

இவள் ஏன் அப்படி சொல்கிறாள் என்று புரியாமல் மற்றவர்கள் விழித்தார்கள்!

  

“என்னடி லூசு சொல்ற?”,

  

“உன் வெயிட்டுக்கு உன்னை அம்மா தலைக்கு மேல தூக்கி வைக்குறதுன்னா அவங்க எவ்வளோ ஸ்ட்ராங் வுமனா இருக்கனும்???”,

  

“ஹையோ கடிக்குறாளே!” என்று அலுத்துக் கொண்டாலும் சதீஷால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

  

இப்படியே பேச்சு, சிரிப்பு, கலாட்டா என்று வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

  

விடிகாலை நேரம் என்றாலும் பெட்டிகளை அன்பேக் செய்து அவர்கள் மூன்று பேருக்காகவும் அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்ததை எடுத்துக் கொடுத்தான் சதீஷ்.

  

“இவ்வளவையும் நீயா தேடி வாங்குனீயா எஸ்.கே?? பாவம்டா நீ... என் செல்லம்...” ,