Chillzee KiMo Books : வெற்றி'யின் செல்வி - Chillzee Originals : Vetri'yin Selvi - Chillzee Originals

வெற்றி'யின் செல்வி : Vetri'yin Selvi
 

வெற்றி'யின் செல்வி - Chillzee Originals

காதல் - எப்போது, எப்படி, யாரிடம் வரும் என்பது யாருக்கு தெரியும்.

இந்த கதையின் கதாநாயகி அந்த காதலை உணரும் பொழுதை நாமும் அவளுடன் சேர்ந்து தெரிந்துக் கொள்வோம்.

வெற்றி'யின் செல்வி எனும் இந்த காதல் கதை, ஒரு ஜனரஞ்சகம் நிறைந்த காதல் + குடும்ப கதை.

 

அத்தியாயம் 01

 லவ் யூ!”

தமிழ்ச்செல்வி படபடக்கும் விழிகளுடன் எதிரே இருந்த ஷ்யாம்சுந்தரை பார்த்தாள்.

“நீ இல்லாம என்னால வாழவே முடியாது தமிழ்!”

“நான், நான்”

பதில் சொல்ல முடியாமல் அவள் தடுமாறுவதை கண் இமைக்காமல் பார்த்து ரசித்தான் அவன்.

“நீ இப்போ உடனே பதில் சொல்ல வேண்டாம். யோசிச்சு பொறுமையா பதில் சொன்னால் போதும்”

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றிருந்தவளுக்கு அமைதியாக அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.

சரி என தலை அசைத்து விட்டு, விட்டால் போதும் என வீட்டை நோக்கி தன் ஓட்டை சைக்கிளில் ஓட்டம் எடுத்தாள்.

அந்த கரடு முரடான கிராமத்து சாலையில் சைக்கிள் ஓட்டினாலும் அவள் மனம் படபடத்துக் கொண்டே இருந்தது.

ஷ்யாம் சுந்தர் அவளை காதலிக்கிறானா?

அவளால் நம்பவே முடியவில்லை.

அவனின் படிப்பென்ன, அழகென்ன, அறிவென்ன? அவனுக்கு அவள் ஜோடியாக முடியுமா?

மதுரைக்கு 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஊரை விட்டு மதுரைக்கு கூட அவள் இதுவரை போனதில்லை.

அங்கிருந்த அரசுப் பள்ளியிலேயே ப்ளஸ் டூ படித்து முடித்து விட்டு கல்லூரிக்கு செல்ல வழி (பணம்) இல்லாமல் தவித்திருந்தவளுக்கு வரபிரசாதமாக அரசு கம்ப்யூட்டர் கோர்ஸ் வழங்கும் மையம் ஒன்று அவளின் ஊருக்கு அருகே இருந்த மாமலையூரில் இருப்பது தெரிய வந்தது.

அரசு உதவி பெற்ற கோர்ஸ் என்றாலும் சிறிதளவு கட்டணம் கட்ட வேண்டி இருந்தது. அதற்கே அவள் ஒரு வாரம் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்க வேண்டி இருந்தது.

மற்ற நாட்களை போல சுற்றி இருந்த பச்சை பசுமையான இயற்கையை ரசிக்காமல் ஷ்யாம் சுந்தர் சொன்னதை பற்றியே யோசித்த படி பெடலை மிதித்துக் கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி.

அவள் இருபது வயதான கன்னிப் பெண்.

பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் பார்ப்பவரை திரும்பி பார்க்க வைக்கும் இளமை அவளிடம் இருந்தது.

முகத்தில் பெயருக்கும் ஒப்பனை இல்லை. இரண்டு இமைகளுக்கு நடுவே, சின்னதாக ஒரே, ஒரு பொட்டு.

த்ரெட்டிங் செய்யாவிட்டாலும் இயற்கையின் படைப்பிலேயே அவளுக்கு அழகான வளைந்த புருவங்கள் இருந்தன.

வெள்ளைக் கிண்ணத்தில் இருக்கும் அழகிய திராட்சைகளை போல மனதை சுண்டி இழுக்கும் அழகிய கண்கள். எடுப்பான மூக்கு!

செதுக்கி அமைத்தது போன்ற வடிவான இதழ்கள்.

வெளீர் பச்சை நிற சுரிதார். அதன் மேலே கண்ணியமாக அணிந்திருந்த மஞ்சள் நிற துப்பட்டா. அது காற்றில் பறக்காமல் இருக்க இரண்டு முனைகளையும் முடிச்சு போட்டு வைத்திருந்தாள்.

மற்றவரை பொறாமைப் பட வைக்கும் அலை அலையான நீண்ட கறிய கூந்தல்.

எண்ணெய் வைக்காததால் காற்றில் அசைந்து கொண்டிருந்த தலை முடி கூட ஏதோ விதத்தில் அவளுக்கு அழகாகவே இருந்தது.

அவள் சைக்கிளில் சென்ற போது கடந்து சென்ற பல இளைஞர்கள் அவள் பக்கம் ஆவலுடன் பார்வையை செலுத்தினார்கள். இளைஞிகளோ பொறாமைப் பட்டார்கள்.

ஆனால் தமிழ்ச்செல்வி அதை எதையும் பற்றி இன்றும், என்றும் கவலை பட்டதில்லை.

இது நாள் வரை அவளின் முழு கவனமும் படிக்கும் படிப்பிலேயே இருந்தது.

இன்று தான் முதல் முறையாக அவளின் மனம் சஞ்சலப் பட்டுக் கொண்டிருந்தது.

ஷ்யாம்சுந்தர் இப்படி சொல்வான் என அவள் எதிர்பார்க்கவே இல்லை! அவனுக்கு என்ன பதில் சொல்வது?