Chillzee KiMo Books - நானே உன் சரி பாதி...! - பிந்து வினோத் : Naane un sari paathi...! - Bindu Vinod

நானே உன் சரி பாதி...! - பிந்து வினோத் : Naane un sari paathi...! - Bindu Vinod
 

நானே உன் சரி பாதி...! - பிந்து வினோத்

திருமண வாழ்வில் வரும் ஏற்ற தாழ்வுகளை தங்களின் அன்பால் எதிர்கொண்டு வெல்லும் தம்பதியின் கதை.

 

அத்தியாயம் 01

காலை அலாரம் சிணுங்கியது. சாந்தி அதை அணைத்து விட்டு புரண்டு படுத்தாள். பக்கத்தில் அவளது மூன்று வயது மகள் கவிதாவும் கணவன் அரவிந்தும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.

அரவிந்திற்கும் சாந்திக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. பெற்றோர் பார்த்து நிச்சயித்து நடந்த திருமணம். அவர்கள் மகள் கவிதாவிற்கு இரண்டரை வயதாகிறது. இந்த வருடம் தான் பாலர் பள்ளிக்கு போகிறாள். அரவிந்த் சாந்தி இருவரும் பொறியியல் பட்ட படிப்பு படித்தவர்கள். சாந்தி கணிப்பொறி துறையில் பட்டம் பெற்று இருந்தாள், அரவிந்த் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்று இருந்தான்.

அரவிந்த் சமிபத்தில் தான் தன் தனியார் நிறுவன வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்தமாக ஒரு நிறுவனத்தை நிறுவி இருந்தான். கவிதா இண்டஸ்ட்ரீஸ் பல இயந்திரங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்தது. புதிய நிறுவனம் என்பதால் அரவிந்த் பல நிறுவனங்களுக்கும் சென்று அலைய வேண்டி இருந்தது. நேற்றும் மிக தாமதமாக தான் வீடு வந்து சேர்ந்தான்.

சாந்தி ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் வேலை செய்தாள். ஒவ்வொரு மாதமும் கை நிறைய சம்பளம் கிடைத்தது. ஆனால் அவளுக்கு இப்பொழுதெல்லாம் முன்புபோல் வேலையில் ஆர்வம் இருக்கவில்லை, வேலையை விட்டு விட்டு குழந்தையையும் கணவனையும் கவனிக்கவே விரும்பினாள்.அரவிந்த் தன் வேலையை விட்டு விட்டு கவிதா இண்டஸ்ட்ரீஸ் ஆரம்பித்ததும் அவளுக்காக தான். அவளின் ஆசையை போல் அவள் வீட்டில் இருக்க வேண்டுமென்றால் அவனின் வருமானம் அதிகரிக்க வேண்டும் எனவே தான் அவன் இந்த பரிசோதனையில் இறங்கியதே. அவனுக்கு அவளின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை. அவளின் ஆசைகள் எல்லாம் மிக பெரியவை. நினைக்கும் பொழுது அவளுக்கே சிரிப்பு வந்தது.

அவளுக்கு சிறு வயதில் இருந்தே பெரிய பங்களா வாங்க வேண்டும் மெரூன் கலர் மெர்சிடஸ் பென்ஸ் வாங்க வேண்டுமென்று ஆசை. ஒரு நாள் விளையாட்டாய் அதை சொல்ல போக அதையெல்லாம் வாங்கி தந்தே தீருவேன் என்று அவளுக்கு வாக்கு கொடுத்திருந்தான். அதை எல்லாம் வாங்க முடிகிறதோ இல்லையோ மனைவியின் ஆசையை நிறைவேற்றுவேன் என்று அவன் சொன்னதே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. அன்பான கணவன் முத்தான ஒரு குழந்தை வேறு எதுவும் வேண்டும் என்று அவளுக்கு இப்போது தோன்றவில்லை.

புன்னகையோடு திரும்பியவள் கடிகாரத்தை பார்த்து திடுகிட்டாள். நேரம் அதற்குள் 5 . 45 ஆகி இருந்தது. அவளின் கம்பெனி பஸ் 6 .30 வந்து விடும் அவசர அவசரமாக எழுந்தாள். பல் துலக்கி, டிபனுக்கு இட்லியும் மதியத்திற்கு தேங்காய் சாதமும் செய்து விட்டு குளித்து வந்தவள், உறங்கி கொண்டிருந்த கணவனை மகள் விழிக்காத வண்ணம் எழுப்பினாள். பாதி தூக்கத்தில் விழித்தவன் மனைவியின் அவசரத்தை கண்டு நேரமாகி விட்டதை உணர்ந்தான். பத்து நிமிடத்தில் இட்லியையும் சாதத்தையும் டிபன் பாக்ஸில் அடைத்து விட்டு, தலை வாரி பவுடர் இட்டு கிளம்பினாள். அதற்குள் அரவிந்தும் முகம் கழுவி பைக்குடன் தயாராயிருந்தான். தினமும் காலையில் மனைவியை பஸ் ஸ்டாப்பில் பைக்கில் கொண்டு விடுவது அரவிந்தின் வேலை. அவர்களுக்கு கல்யாணமாகி 5 ஆண்டுகள் ஆன போதும் தினமும் நடக்கும் வாடிக்கை இது. கணவன் வருவதற்குள் கவிதா எழுந்தாள் அவளை கொஞ்சம் பார்த்து கொள்ளுமாறு அவர்கள் தங்கி இருக்கும் வீட்டு சொந்தகாரரின் மனைவியிடம் சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

சாந்தி வேலை பார்த்த நிறுவனம் புற நகர் பகுதியில் இருந்தது. நிறுவனமே அலுவலர்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுத்திருந்தது. ஆனால் இவர்கள் தங்கி இருக்கும் இடம் தொலைவில் இருந்ததால் சாந்தி தினமும் காலையில் 6.30 கிளம்பினால் மாலை 7 மணிக்கு மேல் தான் வருவாள். பகலில் கவிதாவை கவனித்து கொள்ள ஒரு ஆயா இருந்தார்கள். காலையில் 8 மணிக்கு வந்து மாலையில் சாந்தி வரும் வரை கவிதாவை கவனித்து கொள்வார்கள்.

இருவரின் பெற்றோரும் சொந்த ஊரில்இருந்தார்கள். சொந்த இடத்தை விட்டு விட்டு சென்னை வர அவர்களுக்கு விருப்பம் இல்லை. இவர்களுக்கும் குழந்தையை பிரிய மனமில்லை எனவே ஆயா அரவணைப்பிலேயே கவிதா வளர்ந்தாள். இதில் சாந்திக்கு சற்று வருத்தம் தான், ஆனாலும் அவர்கள் தங்கி இருந்த வீட்டு ஓனரின் மனைவி கற்பகம் மிகவும் நல்ல குணம் படைத்தவர்கள். கவிதாவை தன் சொந்த பேத்தி போல் பார்த்து கொண்டார்கள். பஸ் நிலையத்திற்கு இரண்டு நிமிடம் முன்பே வந்து விட்டதை கை கடிகாரத்தை பார்த்து அறிந்து கொண்டவள், கணவனிடம் அவன் கம்பெனி பற்றி விசாரித்தாள். வார நாட்களில் இருவரும் மனம் விட்டு பேசி கொள்வதே இது போன்று அரிதாய் கிடைக்கும் இரண்டு நிமிடங்களில் தான்.