Chillzee KiMo Books - கண்ணை நம்பாதே... - பிந்து வினோத் : Kannai nambathe - Bindu Vinod

கண்ணை நம்பாதே... - பிந்து வினோத் : Kannai nambathe - Bindu Vinod
 

கண்ணை நம்பாதே... - பிந்து வினோத்

இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் என் மனதில் ஏற்பட்ட பாதிப்பின் பிரதிபலிப்பாக நான் எழுதியது...

என்னுடைய ரொமாண்டிக் கதைகளையே படித்திருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும் :-)

படித்து விட்டு சொல்லுங்கள்.

 

 

01. கண்ணிலே என்ன உண்டு?

ப்பார்ட்மென்ட் வாயிலில் ஆட்டோவில் இருந்து இறங்கிய சௌபர்ணிகா, ஆட்டோவிற்கான பணத்தைக் கொடுத்து விட்டு, பெட்டியுடன் உள்ளே வந்தாள்.

வாசல் கிரில் தட்டப் படும் ஓசைக் கேட்டு எட்டி பார்த்த கோமதி, சௌபர்ணிகாவை பார்த்து முகம் மலர்ந்தாள்.

“வா சௌபி, உன்னை இன்னமும் காணுமேன்னு நினைச்சிட்டே இருந்தேன்...”

“வழியில ஒரே டிராபிக் சித்தி...”

“ஆமாம் சென்னையில எது இருக்கோ இல்லையோ ட்ராப்பிக்கிற்கு ஒரு குறைச்சலும் இல்லை... அம்மா, அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா?”

“நல்லா இருக்காங்க... இந்தாங்க இதெல்லாம் உங்களுக்கும் சித்தப்பாவிற்கும் ஸ்பெஷலா அம்மா தந்தது... இது அபிக்கு...”

“அட அதிரசமா? உங்க அம்மாக்கு இன்னும் இதெல்லாம் நினைவிருக்கு பாரு...”

“அவங்க செய்வதை விரும்பி சாப்பிடும் யாரையும் அம்மா மறக்க மாட்டாங்க சித்தி...” கண்சிமிட்டலுடன் சொல்லி சிரித்தவள்,

“ஆமாம் சித்தப்பா ஆபிசுக்கு போயாச்சா?”

“ஆமாம்... நீ வந்த உடனே போன் செய்ய சொன்னார்... நான் அவருக்கு இன்பார்ம் செய்திடுறேன்... அபி வர நாலரை மணி ஆகும்...”

“ஓ!”

“நீ நாளைக்கு தானே போகனும்? இன்னைக்கு ரெஸ்ட் எடு... போர் அடித்தால் படுத்து தூங்கு...”

“போர் எல்லாம் இல்லை சித்தி... கொஞ்சம் ப்ரிபேர் செய்யனும்... ரொம்ப ஆர்வத்தோடு வந்திருக்கேன்.. மூணு மாசம் இன்டர்ன்ஷிப் தான், ஆனாலும் நல்லா செய்யனும்...”

“உனக்கென்ன சௌபி நீ நல்லா தான் செய்வ...” என்ற கோமதி, ஒரு சில வினாடிகள் இடைவெளி விட்டு,

“ஆமாம் நீ அந்த கஸ்தூரியோடவா மூணு மாசம் வேலை செய்ய போற?”

சௌபர்ணிகாவின் கண்கள் பளிச்சிட்டன...

“ஆமாம் சித்தி உங்களுக்கு அவங்களை தெரியுமா? அவங்களோட கூட வேலை செய்ய இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை...”

சௌபர்ணிகாவிற்கு சிறு வயது முதலே பத்திரிக்கை துறையில் ஆர்வம் அதிகம். அதிலும் கஸ்தூரியின் கட்டுரைகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும்... பெண்கள் பற்றி கஸ்தூரி எழுதும் கட்டுரைகள் படித்து தான் அவளுக்கு அந்த துறையில் ஆர்வம் வந்தது என்று சொன்னாலும் கூட மிகையில்லை...

அவளின் ஆர்வத்தை அவளின் பெற்றோரும் தடுக்கவில்லை... பள்ளி படிப்பு முடித்து பி.எஸ்.ஸி விஷுவல் கம்யுனிகேஷன் தேர்வு செய்து படித்தாள். கல்லூரி இறுதி ஆண்டில் நடைபெற்ற மாநில அளவிலான மாணவ பத்திரிக்கையாளர் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றாள்.

அதற்கு பரிசாக நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற சென்னையை தலைமையகமாக கொண்ட அந்த பத்திரிக்கை குழுமத்தில் மூன்று மாதம் பயிற்சி பெறும் வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருந்தது. அந்த பத்திரிக்கை குழுமம் பல வகையான இதழ்களை வெளியிட்டுக் கொண்டிருந்தது... சௌபர்ணிகா, மனதில் தன்னுடைய முன் மாதிரியாக நினைத்திருந்த கஸ்தூரி பொறுப்பேற்றிருந்த பெண்சக்தி வார இதழில் பயிற்சி பெற விரும்பினாள்... அதுவே அவளுக்கு கிடைக்கவும் செய்திருந்தது...

சௌபர்ணிகாவின் முகத்தில் மின்னிய மகிழ்ச்சியை கவனித்த கோமதி,

“தெரியாமல் என்ன? எல்லாம் தெரியும்...”

கோமதி சொன்ன தோரணையில் திடுக்கிட்டு பார்த்தாள் சௌபர்ணிகா.

“என்ன பார்க்கிற? நீ சொல்லும் அந்த பெண்சக்தி நடத்துற கஸ்தூரி இதே அபார்ட்மென்ட்டில் தான் இருக்கா... பொம்பளையா அவ! சரியான தலை கணம் பிடிச்சவ... எங்களை எல்லாம் பார்த்தால் பேச கூட மாட்டாள்... இவள் எல்லாம் பெண்கள் எப்படி இருக்கனும்னு சொல்ற பத்திரிக்கை நடத்துறா... எல்லாம் நேரம் தான்...”

சௌபர்ணிகாவிற்கு கோபம் வந்தது...

“என்ன சித்தி இப்படி சொல்றீங்க? அவங்க ஒரு பெரிய ஜர்ணலிஸ்ட்...”

“என்ன மண்ணாங்கட்டியோ போ... அவளுடைய புருஷன் ஊர் ஊரா அலையுற வேலை செய்றான்... பெரிய பணக்காரன்... இவள் அவனையும் குழந்தைகளையும் கவனிப்பதை விட்டுட்டு இதை செய்றேன் அதை செய்றேன்னு சுத்திட்டு இருக்கா... அவளும் அவளுடைய உடையும் நடையும்...”

சௌபர்ணிகா பதில் சொல்லவில்லை... பதில் சொல்ல விரும்பவில்லை... அதற்கு