Chillzee KiMo Books - மனம் விரும்புதே உன்னை...! - பிந்து வினோத் : Manam virumbuthe unnai...! - Bindu Vinod

 

Other editions available!!! Click here to view other editions of this book.
மனம் விரும்புதே உன்னை...! - பிந்து வினோத் : Manam virumbuthe unnai...! - Bindu Vinod
 

மனம் விரும்புதே உன்னை...!

Chillzeeயில் தொடர்கதையாக வெளி வந்த போது பெரும் வரவேற்பை பெற்ற கதை இது.

மூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை!

 

1.

ஞ்சீவ் தயாராகி மாடியில் இருந்து இறங்கி வந்தான் .

"அண்ணி அண்ணி .. ரெடியா?"

"ரெண்டு நிமிஷம் சஞ்சீவ் " என்று கீதா தன் அறையில் இருந்து குரல் கொடுத்தாள்.

ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த அவன் அன்னை காஞ்சனா, காலை எட்டு மணிக்கே அதிசயமாக எழுந்ததோடு மட்டும் அல்லாமல் வெளியே செல்ல வேறு தயாராக இருந்த தன் இரண்டாம் மகனை அதிசயமாக பார்த்தாள்.

"என்னடா சஞ்சீவ் அதிசயம்... ஒன்பது மணிக்கு முன்னாடி பெட்ல இருந்து அசையவே மாட்ட.. இப்படி எட்டு மணிக்கே ரெடியாகி இருக்கிற?

"என்னம்மா செய்யறது.. என்னோட ஹாஸ்பிட்டல்ல இன்னைக்கு வெளிநாட்டுல இருந்து சில ஸ்பெஷலிஸ்ட்ஸ் வர்றாங்க... என்ன தான் எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லைன்னாலும் ஒரு எம்-டி யா நான் போகலைன்னா நல்லா இருகாதில்லை? அதான் அண்ணியை சீக்கிரம் எழுப்பி விட சொன்னேன். அண்ணியும் வெளிய போகணும்னு .."

"அது எனக்கு தெரியும்டா.. உங்க அண்ணி என்கிட்டே சொல்லாம எதுவும் செய்யவும் மாட்டா, எங்கேயும் போகவும் மாட்டா"

காஞ்சனாவின் குரலில் இருந்த பெருமையை கவனித்தவன், அண்ணனின் காதல் பற்றி தெரிந்த போது இதே அன்னை செய்த ஆர்பாட்டங்கள் நினைவு வரவும் ,

"இதுக்கு தான் அம்மா லவ் மேரேஜ் செய்துக்கணும்.. பாருங்க அண்ணி அண்ணனையும் நல்லா பார்த்துக்குறாங்க உங்க கிட்டயும் அன்பா மரியாதையா நடந்துக்குறாங்க..." என்றான் நக்கலாக

காஞ்சனா அவனுக்கு கோபமாக பதில் சொல்லும் முன், சஞ்சீவ் சொல்வதை கேட்டபடி வந்த கீதா,

"என்ன சஞ்சீவ், இன்னைக்கு நான் தான் உங்களுக்கு விளையாட கிடைச்சேனா?"

மருமகளை கண்ட உடன் காஞ்சனாவின் முகம் மலர்ந்தது..

"வாம்மா கீதா, அவன் விளையாட்டுத்தனமாக சொன்னாலும் உன்னை பத்தி சொன்னது எதுவும் தப்பு இல்லை. உன்னை மாதிரி ஒரு மருமகள் கிடைக்க எங்க குடும்பமே கொடுத்து வச்சிருக்கணும். அடுத்து வருபவளும் இதே போல இருந்தா நல்லா தான் இருக்கும். என் தம்பி மகள் கண்மணி..."

"ஐயோ அம்மா திரும்ப ஆரம்பிக்காதீங்க கண்மணி எனக்கு ஒரு தங்கை மாதிரி... இந்த மாதிரி பேசுறதை இதோடு நிறுத்துங்க... அண்ணி நீங்க ரெடியா? போலாமா?

"டேய் இப்படியே பேசிட்டு இருந்தா உனக்கு கல்யாணம் ஆன மாதிரி தான்... சரி அதை விடு ஏதோ வெளிநாட்டுல இருந்து யாரோ வராங்கன்னு சொன்னியே கொஞ்சம் நல்லா டிரஸ் பண்ணிட்டு போக கூடாதா? இன்னைக்குமா இந்த ஜீன்சும் டீ ஷர்டும்? அதுவும் மஞ்சள் கலர்ல?"

"இது எல்லாம் ரொம்ப ஓவர் அம்மா... ஏதோ அவங்க வர்ராங்கன்னு நான் என் தூக்கத்தை தியாகம் செஞ்சதே பெரிசு.. வாங்க அண்ணி நாம கிளம்புவோம்... பை மம்மி ...”

"சரி அத்தை நானும் போயிட்டு வரேன்.,. ஏதாவது வேணும்னா என் மொபையிலுக்கு போன் போடுங்க.. காலையில போட வேண்டிய மாத்திரை இதோ இருக்கு... மதியம் போட வேண்டியதை எடுத்து உங்க ரூம் டேபிள் மேலவச்சிருக்கிறேன்.  கலாவிடமும் சொல்லி இருக்கேன். "

"அதெல்லாம் சரி தான் கீதா, நான் என்ன குழந்தையா? நீ உன் பிரெண்ட்ஸ் கூட சந்தோஷமாக டைம் பாஸ் பண்ணிட்டு வா..."

"சரி அத்தை நான் வரேன்.."

தற்குள் காரை கிளப்பி விட்டு பொறுமை இன்றி ஹார்ன் அடித்து கொண்டிருந்தான் சஞ்சீவ்.

காரின் கதவை திறந்து அமர்ந்தவள்,

"அடடா சஞ்சீவ் கொஞ்சம் பொறுமை வேண்டும்.. அம்மா கிட்ட கொஞ்சம் அன்பா பொறுமையா பேசினால் என்ன? பாவம் அத்தை மாமா இறந்தப்புறம் உங்களையும் ராஜீவையும் எவ்வளவு கஷ்டப் பட்டு வளர்தாங்கன்னு உங்களுக்குதெரியும் தானே?"

காரை கிளப்பியவன், அண்ணியிடம்,

"அம்மா பாவம் தான் இல்லன்னு நானும் சொல்லலை அண்ணி... அப்பா மட்டும் எங்களுக்காக பணம் வச்சிட்டு போயிருக்காவிட்டால் ரொம்ப கஷ்டம் தான்..  அம்மா சொல்வது போல் மாமா உதவி செய்திருக்கிறார் தான்.. அதற்காக கண்மணியை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? நாங்க ஊருக்கு போகும் போது அம்மாவோட அக்கா பசங்களும் வருவாங்க ... அவங்களோட நானும் ராஜீவும் கண்மணியும் சேர்ந்து விளையாடுவோம்.. அவங்க எல்லோரும் சகோதர சகோதரிகள் ஆனால் கண்மணி மட்டும் அப்படி இல்லை என்றால் எப்படி? சின்ன வயசில் இருந்தே எனக்கு அவள் மேல் ஒரு சகோதர வாஞ்சை தான்... அம்மா தான் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க... நீங்க தான் அண்ணி அவங்களுக்கு புரிய வைக்கணும். உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா அண்ணி எனக்கு கல்யாணத்தின் மேல் நம்பிக்கை இல்லை... இப்போ பாருங்க யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்... எனக்கு பிடிச்ச மாதிரிடிரஸ்.. எனக்கு பிடிச்ச மாதிரி சாப்பாடு.. எனக்கு பிடிச்ச நேரம் தூக்கம்... பிரௌசிங் etc etc இதெல்லாம் எதுக்கு ஸ்பாயில் பண்ணனும்.."