எங்கே எந்தன்  இதயம் அன்பே...! - பிந்து வினோத் : Enke entan itayam anpe...! - Bindu Vinod
 

கதையைப் பற்றி:

 

ரவிந்த்

கதையின் கதாநாயகன்!

தொலைத்து விட்ட காதலை தேடி லண்டனில் இருந்து இந்தியா வருகிறான்.

சென்னையில் அவனுக்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி காத்திருக்கிறது!

 

சாந்தி

கதையின் கதாநாயகி!

அரவிந்தின் மீது 1000% அன்பை வைத்து மனம் உடைந்துப் போனவள்!

 

ழந்த காதலை தேடி வந்தவனும், உடைந்த மனதை மறைத்து வாழ்பவளும் மீண்டும் சந்திப்பார்களா???

அப்படி சந்தித்தால்????

 

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!

 

காதல் – குடும்ப வகையை சார்ந்த பொழுதுப்போக்கு கதை.


 

எங்கே எந்தன் இதயம் அன்பே...!

  

என் கதையை வாசிக்கும் நண்பர்களுக்கு வணக்கம்!

  

இந்த கதையில் பிற மொழி கதாபாத்திரங்களும் வருகிறார்கள். அவர்களுடைய உரையாடல் ஆங்கிலத்தில் இருக்கும் என்றாலும், கதை சுவாரசியத்திற்காக நமக்கு புரியும் தமிழ் கலந்த ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கிறேன்!

  

இதை மனதில் வைத்துக் கொண்டு கதையை படிக்கத் தொடங்குங்கள்.

  

நன்றி.

  

அத்தியாயம் – 01.

  

ந்த அறையில் இருந்த அவனுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது, அடுத்து என்ன என்று பரபரத்தது அரவிந்தின் மனம்!

  

அந்த பறந்து விரிந்த கட்டிடத்தை விட்டு வெளியே வந்து பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.

  

அவனுடைய Audi A1 கார் நின்று இருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த மரத்தின் அருகே சென்றுப் பார்த்தான்.

  

ஆர்ட்டின் வடிவத்தின் உள்ளே

  

A S

  

என்ற சின்ன எழுத்துக்கள் கண்ணில் பட்டது.

  

அதன் மேலே கையால் வருடினான். வலிக்காமல் இருக்க மயிலிறகால் வருடுவதைப் போல மெல்ல, மென்மையாக வருடினான்.

  

✳✳✳✳✳

  

“என்ன ஹனி இது? டாக்டர் மாதிரியா நடந்துக்குற? மத்தவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க?”

  

“யாரு இந்த ‘ஆஸ்’ன்னு யோசிப்பாங்க.” குறும்பு மின்ன சொல்லிவிட்டு அவள் சிரிக்க, அவனுக்கு அவன் கேட்ட கேள்வி, அதன் காரணம் எல்லாம் மறந்துப் போனது.

  

”எதுக்கு டார்லிங் இப்படி பார்க்குறீங்க? இதை எல்லாம் மட்டும் டாக்டர் செய்யலாமா?”

  

“டாக்டர்ங்களும் மனிதர்கள் தானே?”

  

“அப்போ நான் செஞ்சதும் சரி. ஐ லவ் யூ சோ மச் அரவிந்த். இந்த மரம் என்ன, முடிஞ்சா வானத்துல, நிலால, மார்ஸ், ஜூப்பிட்டர்ன்னு எங்கே வேணா எழுதுவேன், ஐ லவ் யூ!”

  

✳✳✳✳✳

  

அவனின் விழியோரம் ஈரமானது.

  

காரினுள் ஏறும் முன் மீண்டும் திரும்பி அந்த பெரிய கட்டிடத்தைப் பார்த்தான்!