Online Books / Novels Tagged : Historical - Chillzee KiMo

பாண்டிய நெடுங்காவியம் - பாகம்1 - ஸ்ரீஜா வெங்கடேஷ்

நூலைப் பற்றி....

நம் தமிழ் நாட்டில் சோழ அரசர்கள் பலரின் வரலாறுகள் மிகுதியாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவர்களை விட பழமையும் பெருமையும் வாய்ந்த பாண்டியர்களைப் பற்றி அதிகமான நூல்கள் இல்லை. தகவல் இன்மை ஒரு காரணமாக இருக்கலாம். "பாண்டிய நெடுங்காவியம் - பாகம்1" என்ற பெயரோடு முதல் பாகமாக உங்கள் கரங்களில் தவழும் இந்த நாவல் சங்கப் பாடல்களில் இடம் பெற்ற ஒரு வீரத் தமிழனின் கற்பனை கலந்த உண்மை வரலாறு.

"தலையாலங்கனத்துச் செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன்" என்ற பெயர் தமிழ் படித்தவர்களுக்கு ஓரளவு நினைவிருக்கலாம். அவனது கதையை அவன் பெற்ற வெற்றியை, அவன் காதலி செண்பகக் குழலியின் தியாகத்தைப் பொற்றும் விதமாக எழுதப்பட்டது தான் பாண்டிய நெடுங்காவியம். இது மூன்று பாகங்களாக எழுதப்பட்டுள்ளது.

கண்ணகி மதுரையை எரித்த பிறகு, நீதி தவறி விட்டோம் என  மன்னன் நெடுஞ்செழியன் மனைவியோடு உயிரை விட்ட பிறகு அவர்களது செல்வன், இளவசரன் அரசனானான். அந்த நிலையில் ஏழு அரசர்கள் சேர்ந்து அவன் மீது படையெடுத்து வந்தனர். அவனோ சிறு பிள்ளை. எழுவர் சேர்ந்து வந்தால் என்ன செய்வான் பாவம்? தலை நகரின் நிலையோ பரிதாபம். வழி காட்ட தந்தை இல்லை. இந்த நிலையில் அவன் மனம் சோர்ந்தனா? நிச்சயம் இல்லை. சங்கப்புலவர்கள்  முன்னிலையில் வெஞ்சினம் கூறினான். நான் இந்த அற்பர்களை ஓட ஓட விரட்டாவிட்டால் இனி புலவர்கள் என் நாட்டைப் புகழ்ந்து பாட வேண்டாம் என சூளுரைத்தான்.

அப்படிப்பட்ட 21 வயது இளைஞனின் கதை தான் பாண்டிய நெடுங்காவியம். அவனது காதலி செண்பகக் குழலி, நண்பன் வில்லவன் கோதை என பல கதாபாத்திரங்கள் கற்பனை என்றாலும் வெற்றிவேற் செழியர், அரசர் பட்டத்தரசி போன்றவர்கள் பல காலம் முன்பாக நம்மோடு ஊடாடியவர்கள் தான்.

எந்தச் சதிக்கும் ஆரம்பம் என ஒன்று உண்டு. அதனைத் தொடங்கி வைப்பவன் குவளை மாறன். பாண்டிய நாட்டைச் சேர்ந்த அவன் பாண்டிய வம்சத்தைப் பூண்டோடு அழிக்க சபதமிட்டு தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டான். அவனது தந்திரங்கள், கொடூரங்கள் இவற்றை பாண்டிய இளவரசன் முறியடித்தானா? குவளை மாறன் இப்படிப்ப்பட்ட பயங்கரமான சபதம் பூண என்ன காரணம்?

இவற்றை பாண்டிய நெடுங்காவியம் மூன்று பாகங்களும் படித்தால் தெளிவாகப் புரியும். கலைஞர் அவர்கள் நெல்லை மாவட்டத்தில் சங்கரன் கோயில் அருகே இருக்கும் மாங்குடி என்ற ஊரில் சங்கப்புலவர் மாங்குடி மருதனார் என்பவருக்கு நினைவுத்தூண் எழுப்பியிருக்கிறார். அவரே இளவரசன் நெடுஞ்செழியனின் ஆசான் எனக் கொடுத்துள்ளேன். மாங்குடி மருதனார் தான் அப்போதைய தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர். அவரோடு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அறை கூவிய புலவர் கணியன் பூங்குன்றனாரும் ஒரு கதாபாத்திரமாக உலாவுகிறார் இந்தக் காவியத்தில். அதோடு அந்நாட்களில் நம் தமிழ் மண்ணில் நடைபெற்ற வியாபாரங்கள், வெளி நாட்டவரின் வருகை, அவர்களின் நடவடிக்கைகள், நம் மக்களின் பண்பு என பல விஷயங்களையும் ஆராய்ந்து தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய காவியம் இது. படித்து விட்டுக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே!

Published in Books
Page 2 of 2